கடமை
- Vasantha Balan
- Sep 12, 2018
- 1 min read

இந்தியாவில் சட்டங்கள் புதியதாக இயற்றப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போலே சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும். ஓட்டைகள் வழியாக தானே குற்றவாளிகள் தப்பி செல்கிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிப்பது சரியானது தான் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு அரசு குற்றவாளிகள் எப்படி உருவாகுகிறார்கள் எதனால் உருவாகுகிறார்கள் என்று கண்டறிந்து அந்த வழியையும் அடைக்கவேண்டும்.
புரையோடிப்போயிருக்கும் சமூகக்குற்றவாளிகளை தூக்கு மேடைக்கு ஏற்றுவதைத்தாண்டி வேர்களில் பரவியிருக்கும் கரையான்களையும் அழிக்க வேண்டியது இந்த அரசின் கடமை, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை.
ஆண்,பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை உடனடியாக கடுமையான சட்டங்களால் தடுக்கப்படவேண்டும் அதே மாதிரி குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் GOOD TOUCH கெட்ட தொடுதலை BAD TOUCH பெற்றோர்களாகிய நாம் சொல்லித்தரவேண்டும். பள்ளியெங்கும் இதற்கான முகாம்கள் நடத்தப்படவேண்டும், அரசின் சார்பிலும் இந்தியாவெங்கும் நடத்தப்படவேண்டும். அப்போது தான் குழந்தைகள் நம்மிடம் சிறு செய்கையில் எச்சரிக்கையிடுவார்கள்.
நிர்மலா தேவி போன்று மூளைசலவை செய்யும் பேராசிரியைகளிடமிருந்தும் நம் பெண்களை காப்பாற்றவேண்டும்.
ஒட்டு மொத்தமாக பெற்றோர்களும் குழந்தைகளும் அரசும் பெண்களும் அகமும்புறமுமாக காரணிகளை யோசித்து பாலியல் வன்முறைகளை தடுக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.
டெங்கு கொசுவை ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல வக்கிர நோக்கோடு நம் குழந்தைகளை முற்றுகையிடும் கொசுகளை கொன்றழிக்க களம் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது



Comments