மழைக்காலம்

பெரும் மழைக்காலம் கேரளாவை வாட்டி எடுக்கிறது. விரைவில் கேரளாவில் மழை நின்று இயற்கை அவர்களை காக்கட்டும்,
தமிழகத்தை பொறுத்தவரை இந்த மழைக்காலத்தில் வெளிவரும் செய்திகள் அணைகள் நிறைந்து உபரி நீர் திறப்பு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம், திற்பரப்பு அருவியில், குற்றாலத்தில் குளிக்கத்தடை இப்படியான செய்திகளை படிக்கும் போது இயற்கை அளவுக்கடந்த நீரை தமிழகத்திற்கு கொடையாக தரும் போதும் நம் கொடை வள்ளல்கள் மழைநீரை சேமிக்க இருந்த அத்தனை குளங்களையும் ஏரிகளையும் மூடி ப்ளாட் போட்டு விற்று விட்டார்கள்.
சில மாதங்களில் நாமும் மழை வெள்ளத்தையெல்லாம் வசதியாக மறந்து விடுவோம்.
மறந்த மாதங்களில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கும் பயில் வாடி நிற்கும் காவேரியில் நமக்கு 50 டிஎம்சியாவது திறந்து விடுங்கள் என்ற கையறுநிலை ஏற்பட்டு போராட்டம் வெடிக்கும். நடுவர் மன்றம்,உச்சநீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்படுவோம். அப்போராட்டத்தில் கலந்து கொண்டு நம் விவசாயிகளின் மண்டை உடையும். அந்த குருதி செம்புலபெயர்நீர் போல கலக்கும். மழைநீரை சேமிக்க தவறவிட்ட நீர் மேலாண்மை நாளை நம்மை நம் சகோதரனுடன் நீருக்காக மோதும் யுத்தத்தில் நிறுத்தும்.
ஆக தண்ணீருக்கான பஞ்சம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது தானே. அப்போது இந்த யுத்தமும்.... அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள் நாமும் நல்லாவே நடிக்கிறோம்.